TN Government Diwali Happy News: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று பிற்பகல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வெளியூரில் இருப்பவர்கள்சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாகவும், முக்கிய நகரங்களில் மாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அத்துடன் இன்று மாலை புதுத்துணி, பட்டாசு வாங்க திட்டமிட்டிருந்த குழந்தைகளுக்கு அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

தீபாவளி பண்டிகை சிறப்பு விடுமுறை:
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு விடுமுறையாக நவம்பர் 1 ஆம் தேதி அறிவித்திருந்தது. அதாவது வியாழக்கிழமை தீபாவளி, அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மட்டும் அரசு வேலை நாளாக இருந்தது. சனி மற்றும் ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்களாக இருந்ததால், தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் தீபாவளிக்காக வெள்ளிக்கிழமை ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனை பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களின் கோரிக்கையையும் விருப்பத்தையும் ஏற்று வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்பு ஏற்கனவே பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மகிழ்ச்சியான செய்தி:
இந்த சூழலில் தான் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக அறிவித்திருக்கிறது. தமிழக அரசு. இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் உத்தரவில், “அக்டோபர் 30 ஆம் தேதி புதன்கிழமை முற்பகல் மட்டுமே பள்ளி கல்லூரிகள் செயல்படும். பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிடுகிறது” என தெரிவித்துள்ளது.
இன்று துணி மற்றும் பட்டாசு கடைகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாகவும், இரட்டிப்பு தீபாவளி பரிசாகவும் அமைந்திருக்கிறது. நவம்பர் 4 ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்.

போனஸ் அறிவிப்பு:
தீபாவளிக்காக அரசு ஏற்கனவே குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து மகிழ்ச்சியை கொடுத்தது. மற்றவர்களுக்கு சிறப்பு போனஸ் தொகை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனால் அவர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த ஆண்டு தீபாவளியைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு அறிவிப்புகள் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.